Saturday, July 13, 2024

குறுங்கதை - தன்னலம்


 முதலில் நடந்த பிளாட் சந்திப்பில் எல்லோரும் மகிழ்ச்சியாகத் தான் இருந்தார்கள்.

பிறகு பிளாட் சங்கத்தின் விதிமுறைகள் பேசும் போது ஒரு சிறு தகராறு.
“நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகள் வைத்துக் கொள்ளக் கூடாது,” என்று ஷரத்து 13.2 கூறியது.
“அது எப்படி நாம சொல்ல முடியும்,” என்றேன் நான். “மத்தவங்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாதுன்னு தான் சொல்லலாம்.”
கூட்டத்தை நடத்திய பாலா, “நாய் குரைக்கும்,” என்றார். பிறர் அவரை ஆமோதித்தனர்.
(சில நாள் கழித்து ஒரு நாள் பாலாவைக் கீழே பார்த்தேன். ஒரு வகை எலியை அவர் வளர்த்து வந்தார். அது எங்கோ ஓடிப் போய் விட்டது, என்று தேடிக் கொண்டிருந்தார்.)
“ஏற்கனவே நாய் வச்சிருந்தா?” என்றேன்.
எல்லோரும் என்னை அப்போது சந்தேகத்துடன் பார்த்தனர்.
“நீங்க வச்சிருக்கீங்களா?” என்றார் சாவித்ரி என்று ஒரு பெண்மணி.
“இல்லை.”
“அப்புறம் எதுக்கு…?” என்று இழுத்தார்.
இந்தக் கேள்வி மறுபடி, மறுபடி வந்தது. பிளாட்டில் என்னைக் குறித்து ஏதோ ஒரு ஐயம் இருந்தது.
ஒரு வருடம் சென்ற பின் பூகம்பம் வெடித்தது.
*
பிளாட்டின் கீழே சில அறைகள் இருந்தன. அவை பூட்டியே கிடக்கும். அவ்வப்போது சில உரிமையாளர்கள் மட்டும் அவற்றில் கட்டில், நாற்காலி, ஏ.சி என்று வைத்திருந்தார்கள்.
விசாரித்ததில் இந்த அறைகளை மட்டும் சில பிளாட் சொந்தக்காரர்களுக்கு கட்டுமான கம்பெனி முறைகேடாக விற்றிருந்தது தெரிய வந்தது.
இதைக் குறித்துப் பேச பாலா அவர் வீட்டிற்கு பலரை அழைத்தார். போனால் அவர் வீட்டெதிரே இருந்த பாதையில் பெரிய வேலி கட்டி இருந்தார்.
நான் அவரிடம், “இது என்ன?” என்று கேட்டேன்.
“பில்டர் கிட்ட வாங்கிட்டேன்,” என்றார்.
பிறர் அந்த வேலியின் அழகைக் குறித்துப் பேசினார்கள். எல்லோர் முகத்திலும் பாலாவைக் குறித்த ஒரு பிரமிப்பு தெரிந்தது.
உள்ளே, பாலாவின் வீட்டில் எங்கள் சந்திப்பு தொடங்கியது.
“ஏற்கனவே அந்த ரூமை எல்லாம் வாங்கிட்டாங்க. இதுக்கு மேல நாம விட்டுற வேண்டியது தான்,” என்றார் பாலா.
பலரும் இதை ஆமோதித்தனர்.
“Live and let live,” என்றார் சாவித்ரி.
“General Body meeting வருது. நாம் எல்லாரும் சேர்ந்து இருக்கணும்,” என்றார் பாலா.
நான், “ஆனா பில்டருக்கு இந்த ஏரியாவை விக்க உரிமை கிடையாதே,” என்றேன்.
எல்லோரும் என்னைத் திரும்பி பார்த்தார்கள். “யாரு? யாரு?” என்று பேசிக் கொண்டார்கள்.
சாவித்ரி, “நாய் வச்சுக்கணும்னு கேட்டாரே, அவர் தான்,” என்றார்.
“பில்டருடைய தர்மம் அது,” என்றார் பாலா.
“அவனும் காசு பாக்கணுமே,” என்றார் மற்றொருவர்.
“இல்ல, இதை நான் கட்டாயம் மீட்டிங்கில் எதிர்ப்பேன்,” என்றேன் நான்.
சாவித்ரி, புரியாமல், ”நீங்க ஏன் இதுல இவ்வளவு ஆர்வத்தோட?” என்றார்.
“பில்டர் மேல ஏதாவது பகையா?” என்றார் பாலா.
“எனக்கு பில்டர் தெரியவே தெரியாது,” என்றேன் நான்.
“அப்புறம்?”
*
பாலாவின் வீட்டில் இருந்து வந்து வாட்ஸாப்பில் இது குறித்த விவாதம் நடந்த போது, நான் மறுபடி, “அது பொது நிலம். அதை விக்க பில்டருக்கு உரிமை கிடையாது,” என்றேன்.
பாலா, “இதுக்கு மேல எல்லோரையும் சேர்க்க நான் ஒண்ணும் பண்ண முடியாது. I will leave,” என்றார்.
உடனே பெரும் ஓலம் வாட்ஸாப்பில் தொடங்கியது.
“நம்ம ஊர்ல ஒண்ணு சேரவே விட மாட்டாங்களே,” என்றார் ஒருவர்.
“இதை மாதிரி எப்போதும் ஒரு பிரகிருதி வந்து பிரச்சினை பண்ணும்.”
சாவித்ரி நீண்ட நேரம் வாட்சப்பில் டைப் செய்தார். பிறகு,”Blackmail,” என்று அனுப்பினார்.
என்னால் இரவு தூங்க முடியவில்லை. மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
“யாரும் என் கூட பேச மாட்டேன்றாங்க,” என்றாள் அவள்.
“ஏன் இப்படி பெர்சனலா தாக்குறாங்கன்னு தெரியலை. நான் ஒரு principled stand எடுக்குறேன்னு கூடத் தெரியலை,” என்றேன்.
“உனக்கு நிஜமாவே தெரியலையா?” என்றாள் அவள்.
“இல்லை.”
“சரி, மீட்டிங் வருதுல்ல? அதுல நான் சொல்றதைப் போய் சொல்லு,” என்றாள்.
*
மீட்டிங்குக்கு நடுங்கி கொண்டே சென்றேன். நான் உள்ளே நுழைந்தவுடன் எல்லோரும் பேசுவதை நிறுத்தி விட்டு என்னையே பார்த்தார்கள்.
சிறிது நேரத்தில் பாலா வந்தார். என்னை பார்த்து பெரிதாக கும்பிடு போட்டார். எல்லோரும் சிரித்தார்கள்.
“சில பேர் கீழ பார்க்கிங்ல ரூம் வாங்கிட்டாங்க. நாம் எல்லாரும் சேர்ந்து அத CMDAல போய் சீராக்கிடலாம்,” என்றார் பாலா.
“பாலா, நீங்க மத்தவங்கள விடுங்க. மெஜாரிட்டி நம்ம தான். எங்க கையெழுத்து போடணும்னு சொல்லுங்க.”
“மெஜாரிட்டி பத்தாதே. எல்லாரும் நூறு சதவிகிதம் ஒத்துக்கணும்.”
“என்ன நான்சென்ஸ் இது? இதுனால தான் இந்த நாடே குட்டிச்சுவரா போகுது.”
“உங்களுக்கு என்ன தான் சார் வேணும்?” என்று கத்தினார் சாவித்ரி, என்னைப் பார்த்து.
நான் இது போல ஒரு கோபத்தை அலுவலகத்தில் கூட சந்தித்ததில்லை என்பதால் திருதிருவென்று விழித்தேன்.
“சார், வெளிய தான் லஞ்சமும் ஊழலும். உள்ள நம்மளாவது சுத்தமா இருக்கலாம்ல?” என்றேன்.
நான் எதிர்பாராதபடி இதற்கு இன்னும் கோபம் அதிகமாகியது!
“பெரிய காந்தி வந்துட்டாரு,” என்றார் ஒருவர்.
“இப்படி பாத்தா யாரும் வீடே வாங்க முடியாது,” என்றார் பாலா.
நான் அவரை உற்றுப் பார்த்தேன். நடிக்கிறாரா இல்லை நிஜமாகவே நம்புகிறாரா?
மெதுவாக எழுந்து நின்றேன். இவர்கள் எல்லோருக்கும் உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது.
“இவ்வளவு பேசுறாரே பாலா சார். அவர் வீட்டு முன்னால உள்ள ஏரியாவுல வேலி போட்டிருக்கார்.”
ஒரு கண அமைதி.
“அதைப் பத்தி உனக்கு என்ன?” என்று ஒரு குரல் கேட்டது.
சாவித்ரி தான் அது.
“I cannot take these personal attacks,” என்றார் பாலா.
“உனக்கு என்ன தாம்பா பிரச்சினை?” என்றார் மற்றொருவர்.
சிலர் பாலாவை கைத்தாங்கலாக அழைத்து வந்து அமர்த்தினார்கள்.
*
“இந்த மாதிரி decorum இல்லாம நடந்துக்கறவங்களுக்கெல்லாம் நல்ல முடிவே வராது,” என்றார் சாவித்ரி.
மேலே சாபங்கள் வருவதற்குள் நான் என் மனைவி சொன்னதை நினைவு கூர்ந்தேன்.
“ஒரு நிமிஷம்,” என்றேன்.
“What more damage can you do?” என்று கத்தினார் ஒருவர்.
“இருங்கோ. என்ன தான் சொல்றான் பாக்கலாம்.”
“என் வீட்டு எதிரையும் இதே மாதிரி ஏரியா இருக்கு,” என்றேன். “அங்க நான் வேலி போடலாம்னா எனக்கு ஓகே.”
சற்று நேர அமைதி. எனக்கு கூனிக் குறுகியது. எந்த அளவுக்கு தாழ்ந்து போய் விட்டேன்?
“பிள்ளையாண்டான் சரியா தான் சொல்றான்!” என்று ஒரு குரல் கேட்டது.
அது சாவித்ரி தான்.

Wednesday, May 22, 2024

குறுங்கதை - சாதிக்கு வெளியே



போர்!
லோஹர் கோட்டையின் பெரும் சுவர்கள் மேலிருந்து பறந்து வரும் அம்புகள்.
மெதுவாக ஊர்ந்து செல்லும் தீ எறி பொறிகள்.
விடிகாலையில் கோட்டையின் உள்ளும் புறமும் இருந்து எழும் மரண ஓலங்கள்.
நான் அம்புகள் விழும் தூரத்திற்கு அப்பால் இருந்தேன். கோட்டையை நோக்கிச் சென்ற மதில் உயர பிடிப்பான்கள், என் வடிவமைப்பு. அவை பாரம் தாங்காமல் சரிந்தால் என் தலை தப்பாது.
சற்றுத் தள்ளி கஜினி அரசர் நின்றார். பூரண கவசத்துடன், களத்தில் இறங்கத் தயாராக.
பிடிப்பான்கள் மதிலை நெருங்கி விட்டன. அவற்றில் இருந்து ஏணிகள் பறந்த சமயத்தில், மதில் மேல் என் பார்வை சென்றது. வில்லாளிகள் மறைந்து விட்டார்கள். அம்பு மழை நின்றது.
அரசர் திரும்பி என்னைப் பார்த்தார்.
*
“அவர்களிடம் ஏதோ ஒரு மர்ம ஆயுதம் இருக்கிறது,” என்று அரசரின் முன்னிலையில் பத்து நாட்கள் முன்னால் சொல்லி இருந்தான் எங்கள் ஒற்றன். “இதை விடப் பெரிய மதில்களை நாம் உடைத்திருக்கிறோம். ஆனால் இந்தக் காஷ்மீரிகளிடம் ஏதோ இருக்கிறது. துணிவுடன் நம்மை எதிர்நோக்குகிறார்கள்.”
அரசரிடம் வேலைக்கு அமர்ந்த நான்காவது பொறியாளன் நான். முன்னால் இருந்த மூவரும் தலை வெட்டப்பட்டு போய்ச் சேர்ந்தார்கள்.
எனக்கு ஒற்றன் சொல்லும் போதே கழுத்தில் வலித்தது.
“மருந்தாக இருக்கலாம்,” என்றேன் நான். “கந்தகம் இந்தப் பகுதிகளில் அதிகம். இமாலயத்தில் கீழ் அடிவார குகைகளில் அது கிடைக்கிறது.”
*
கஜினவீத் வீரர்கள் ஒரு பெரும் சத்தத்துடன் கோட்டையின் அடிப்பகுதியை நோக்கிப் பாய்ந்தனர். அந்த நேரம் மதிலின் முக்காலுக்கு மேல் நான் பார்த்திருந்த மரக்கதவுகள் திறந்தன. அவை வழியே பெருகி பாய்ந்து ஒரு கருப்புத் திரவம் கீழே இருந்தவர் மேலே கொட்டியது.
“மருந்து,” என்றேன் நான்.
வீரர்களில் பலர் அடித்துப் பிடித்து திரும்ப ஓடி வருவதைப் பார்க்க முடிந்தது. ஒருவரை ஒருவர் தவிர்த்து ஓடியதை நான் பார்த்தேன். ஒரு அரை சக்கரத்தின் ஆரங்களைப் போல அவர்கள் பிரிந்து பின்வாங்கினர்.
எங்கும் ஒரு கெட்ட நெடி வீசியது.
“நரகல்,” என்றார் அரசர், தம் தோற்றோடும் சூரர்களைப் பார்த்தவாறே. “மனிதச் சாணம். இந்தியர்களின் ரகசிய ஆயுதம்.”
“அரசே, போய் விடலாம்,” என்றான் பக்கத்தில் இருந்த மெய்க்காப்பாளன்.
அரசர் கோட்டை வாசலைச் சுட்டிக் காட்டினார். அந்த கருப்புத் திரவம் வாசலில் பரந்திருந்தது.
“இதைத் தாண்டி யார் வருவார்கள், முட்டாளே?” என்றார்.
ஆனால் கோட்டைக் கதவு பெரும் சத்தத்துடன் திறப்பதை நான் பார்த்தேன். அந்த நாற்றத்தின் ஊடே கால் வைத்து நடந்து வரும் ஒரு பட்டாளத்தை நாங்கள் பார்த்தவாறே புறமுதுகிட்டு ஓடினோம்.
*
லோஹர் கோட்டையின் தோல்விக்குப் பின்னால் அரசர் காஷ்மீரத்தில் இருந்து வெளியேறவே பெரும் பாடு பட்டார். நான் இடைப்பட்ட குழப்பத்தில் ஜம்பூபுரம் என்று இந்த மக்களால் அழைக்கப் பெறும் நகரத்திற்கு வந்து சேர்ந்தேன்.
சுத்தமான நகரம். பெரும் வீதிகள். அழகான மாடங்கள். மதில் கூட இல்லாத ஒரு சொர்க்கபுரி அது.
“உன் பெயர் என்ன?” என்றான் சந்தையில் நான் பார்த்த ஒரு வியாபாரி.
“பாரணன்,” என்று என் இயற்பெயரை மாற்றிச் சொன்னேன்.
“சாதி?”
நான் அந்தச் சொல் புரியாததால் வேறு எங்கோ பார்த்தேன்.
“எந்தச் சாதி நீ?” என்றான் அவன். “உயர் குலத்தில் பிறந்தவன் போல் இருக்கிறாய்? சொல்ல என்ன தயக்கம்?”
“உங்களை போன்றவன் தான்,” என்றேன் குத்துமதிப்பாக.
“நல்லது, வா என்னுடன்,” என்றான் அவன்.
அவனுடன் சில நாட்கள் வேலை பார்த்த போது அந்தச் “சாதி” என்னும் புரியாத சொல்லுக்கு பொருள் புரிந்து கொள்ள முயற்சித்தேன்.
“நீ எந்த ஊர்? சாதி தெரியாமல் எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார் கோவிலில் ஒரு பண்டாரம்.
“நீங்கள் என்ன சாதி?” என்றேன்.
“சந்நியாசிக்கு சாதி கிடையாது.”
எனக்கு ஏனோ என் கேள்வியில் எனக்கான விமோசனம் இருப்பதாகத் தோன்றியது.
“இந்த வணிகர்களில் பலர் ஒரே மாதிரி இருக்கிறார்களே?” என்றேன்.
அவர் கோவிலுக்கு வருவோர் போவோரை உற்றுப் பார்த்தார்.
“இருபது வருடம் முன்னர் இங்கே கொள்ளை நோய் வந்தது,” என்றார். “வணிகர்கள் பலரைக் கொன்று விட்டது. எஞ்சியவர்கள் ஒரு குடும்பத்தாரோ என்னமோ..” என்றார்.
வணிகர்கள் சபையைக் கண்டேன். ஒருவரை ஒருவர் மாமா, தாத்தா என்று அழைத்துக் கொண்டனர்.
“வெளியே இவர்கள் மணப்பதில்லையா?” என்றேன் பண்டாரத்திடம்.
“எதற்கு வெளியே?”
“சாதிக்கு வெளியே?”
அவருக்கு நான் என்ன கேட்கிறேன் என்று புரியவில்லை. “சாதிக்கு வெளியே” என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை.
*
காலையில் தெரு பெருக்குவோரைப் பார்த்தேன். வீடுகளுக்குப் பின்னால் சென்றார்கள். கையில் ஒரு மூட்டையில் நரகலைக் கொண்டு வந்தார்கள்.
அவர்களும் பார்க்க ஒரே மாதிரி இருந்தார்கள் - சற்று நிறம் குறைந்தவர்கள். ஏழைகள் என்று தெரிந்தது. அவர்கள் வயிறுகள் கூட ஒரே மாதிரி முன்னே தள்ளி இருந்தன.
நான் கஜினி அரசரைக் கண்டுபிடிக்க நேரம் வந்து விட்டது.
*
“இந்த நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரே வேலையைச் செய்பவர்கள்,” என்றேன் அரசரிடம். என்னுடன் அழைத்து வந்திருந்த வேலையாட்கள் இருவரைக் காட்டினேன்.
“தங்களுக்குள்ளேயே மணம் புரிபவர்கள்.”
அரசர் அவர்களை உற்றுப் பார்த்தார்.
“சகோதரர்களா?”
“இல்லை. அரசே, இவர்கள் வேறு வேறு ஊர்களை சேர்ந்தவர்கள். ஆனால் இந்த நாட்டில் ஒரே வேலை பார்ப்பவர்கள் தங்களுக்குள் மணப்பதால் அந்த வேலைக்கு ஏற்ற உடல் ஏற்றங்களைப் பெறுகிறார்கள்.வில்லாளிகள் சாதியைச் சேர்ந்தவர்கள் பருத்த வலது கை கொண்டவர்கள். வணிகர்கள் கணிதத்தில் சிறந்தவர்கள்.”
“இதற்கும் உன் வேலைக்கும் என்ன சம்பந்தம்?”
“அரசே, லோஹர் கோட்டையில் வெளி வந்த படை இவர்களுடையது,” என்றேன் நான். “ பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதக் கழிவுகளுடன் வேலை பார்த்து, தமக்குள் மணம் புரிந்து இவர்களுக்கு உடல் கூறே மாறி விட்டது. நாற்றம் தெரியாது. வாந்தியெடுக்கும் அந்த இயற்கை உணர்ச்சி மரத்து விட்டது. இவர்களையே தம் ரகசிய ஆயுதமாக இந்த இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள். கோட்டையின் மேலிருந்து மனிதச் சாணத்தை ஊற்றுவதும் இவர்களே.”
அரசர் எழுந்து நின்றார்.
“இவர்கள் நம்முடன் வரத் தயார்,” என்றேன் நான். “அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் இந்தச் சாதியினின்றும் விடுதலை.”
*
லோஹர் கோட்டையின் தர்பாரில் பழைய காஷ்மீர மன்னனின் தலை வைக்கப்பட்டது.
வெளியே வெற்றி படைகளின் கூக்குரல். அவர்களிடம் இருந்து தனியாக நின்றார்கள் அந்த தனிப் பட்டாளம். அவர்கள் கைகளில் ரத்தம் தோய்ந்த வாட்கள்.
அரசரிடம் சென்றேன்.
“பட்டாளத்திற்கு விடுதலை?” என்றேன்.
“நமக்கும் நகரங்கள் இருக்கின்றன,” என்றார் அரசர்.

Wednesday, March 13, 2024

குறுங்கதை - இருப்பு


 கீழே மகளுடன் இரவு நடை போகும் போது இருட்டில் ஏதோ நகர்வது தெரிந்தது. உற்றுப் பார்த்தால் ஒரு சிறு தவளை.

“பாருடி!” என்றால் மகள் குதித்துக் கொண்டே வந்து பார்த்தாள்.
“இது தவளையா உனக்கு?”
இது புதிதாக அவள் பள்ளியில் கற்றுக் கொண்ட ஒரு பிரயோகம் என்பதால் நான் பொருட்படுத்தவில்லை.
ஆனால் மேலே வந்து பிரேமாவிடம் சொன்ன போது, நான் எதிர்பார்த்தபடியே, “இந்த சீஸன்ல ஏது தவளை?” என்றாள்.
நான் கம்மென்று இருந்தேன்.
“நத்தையா இருக்கும்.”
சில நாட்கள் சென்ற பின், ஏதோ வெளியே கலாட்டா. நான் மயிலாப்பூர் வழியாக ஆட்டோவில் வந்த போது முன்னால் பஸ்களை நிறுத்தி சிலர் கத்திக் கொண்டிருந்தார்கள்.
வீட்டில் வந்து சொன்னேன்.
“ரவுடி ராஜ்ஜியம்,” என்றேன்.
“ரவுடியால்லாம் இருக்காது. கருப்பா இருந்தா ரவுடியா?”
“அவங்க கருப்பா இருந்தாங்கன்னு நான் சொல்லவே இல்லையே?”
“பஸ்ல சில சமயம் இப்படித் தான் வெளியில தட்டிட்டு ஏறுவாங்க. அவங்கள்லாம் ரவுடியா?”
கம்மென்று வந்து டிவி போட்டேன். “மயிலாப்பூரில் பரபரப்பு,” என்று வந்தது. அவளோ கவனிக்கவேயில்லை.
ஒரு நாள் பக்கத்து வீட்டு டாக்டரிடம் இது குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.
“நான் பிரத்யட்சமாய் பாக்குறதை இல்லன்றா,” என்றேன்.
டாக்டர், “இந்த சீசன்ல தவளையா?” என்றார்.
பிறகு, “ஏதாவது couples counselor கிட்ட போய் மனம் விட்டு பேசுங்க,” என்றார்.
அவளிடம் இது குறித்துச் சொன்னேன்.
“டாக்டர்ட்ட எப்போ பேசினீங்க? அவரே ரொம்ப பிஸி,” என்றாள்.
“சத்தியமா பேசினேண்டி! இதைத் தான் நான் சொல்றேன்,” என்றேன்.
Counselor உமா அறையில் அமர்ந்திருந்தோம். சற்று நேரம் நான் சொல்வதைக் கேட்டார்.
“நான் எனக்கு நடந்ததை சொன்னா அதை நடக்கவே இல்லைன்றா. எனக்கு ரொம்ப மனம் புண்படுது.”
உமா என் மனைவியைப் பார்த்தார்.
“ஆபீஸ்ல எல்லாம் வேலை பாக்குறேன் மேடம். யாருமே இப்படி என்னைப் பத்திச் சொன்னதில்லை. ரொம்ப trusting தான் நான்,” என்றாள்.
“பாத்தீங்களா, மறுபடி நான் சொல்றத deny பண்றா!”
“என்னைப் பத்திக் குத்தம் சொன்னா நான் என்ன பண்ணனும்?”
“அன்னைக்கு அவன் ரவுடி தான்! நான் பாத்தேன்டி…”
உமா ஒரு மணி நேரம் இவ்வாறு சென்ற பிறகு எங்களை அனுப்பி வைத்தார்.
மறு நாள் என்னைத் தனியாகக் கூப்பிட்டார்.
“உங்க கூட அவங்களுக்கு ஏதோ ஆழமா இருக்கு - அன்பா இருங்க. அரவணைச்சுப் போங்க.”
நான் வீட்டில் வந்து பிரேமாவைக் கனிவுடன் பார்த்தேன். கூட காய்கறி நறுக்கிக் கொடுத்தேன். இரவு தலையைக் கோதி விட்டேன்.
“என்ன இன்னைக்கு ரொம்ப அன்பு?” என்றாள்.
“Counselor பேசினாங்க. உன்கிட்ட தான் பிரச்சினையாம்.”
“அப்பிடில்லாம் சொல்லி இருக்க மாட்டாங்களே..”
“பாத்தியா…இதுவே ஒரு பிரச்சினை தான். திரும்ப திரும்ப எனக்கு நடந்த அனுபவத்தை இல்லைன்ற பாரு.”
அவள் எழுந்து உட்கார்ந்தாள். “சரி, நீங்க சொல்றது எல்லாத்தையும் அப்பிடியே ஏத்துக்கிட்டா ஹேப்பியா?”
நான் யோசித்தேன்.
“சரியா?” என்றாள் மறுபடி.
“ஏத்துக்கிட்டா பத்தாது.”
“பின்ன?”
“மனப்பூர்வமா அதுல நம்பணும்” என்றேன் நான்.

Wednesday, May 17, 2023

குறுங்கதை - 7 - IT Wing



“நமக்குத் தெரிஞ்ச பையன் தான். கம்பியூட்டர்ல நல்லா தட்டுவாப்பல,” என்றார் வட்டச் செயலாளர்.
“அப்புறம் நான் சொன்னது?” என்றார் I.T Wing பொறுப்பாளர் ராஜா.
“ம்ம்..மயிலாப்பூர்ல தான் சின்ன வயசுல. நல்லா அவுங்க பாஷை பேசுவான்.”
“எங்க கொஞ்சம் பேசிக் காமி, தம்பி,” என்றார் ராஜா வினோதைப் பார்த்து.
வினோத் தயங்கினான். “அது அவுங்க ஆளுங்க கூட பேசும் போது தானா வரும் சார்.”
“எழுதும் போது?”
“அது வரும்.”
“சரி, உள்ள போய் ID வாங்கிக்க.”
*
வினோத்தை முதலில் சாதாரணமாக டி.வியில் வரும் அய்யர்மார்களை troll செய்ய அனுப்பினார்கள். பத்ரி சேஷாத்திரி, சுமந்த் ராமன் போன்றவர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதும் போது, “இந்த அவாள்லாம் இப்படித் தான் பேஷுவா” போன்ற பின்னூட்டங்களை கொடுப்பது அந்த டீமின் வேலை.
வினோத் சில நாட்கள் சென்ற பின் ராஜாவைப் பார்க்க வந்தான்.
“நம்ம இன்னும் ஆழமா போகணும் ஐயா,” என்றான். “ஐயர்மார் இலக்கணம் தவற மாட்டாங்க. நம்ம எழுத்து அவ்வளவு standardஆ இல்லை.”
ராஜா, “Training கொடுக்கறியா நம்ம ஆளுங்களுக்கு?” என்றார்.
ஒரு நாள் லீலா பேலஸில் பயிற்சி நடந்தது. வினோத் அவ்வளவு சொகுசான இடத்தைப் பார்த்ததே இல்லை. வந்திருந்தவர்கள் பலர் நல்ல தனியார் வேலைகளில் இருப்பவர்கள். சிலர் இதற்கென்று துபாயில் இருந்தெல்லாம் வந்திருந்தார்கள்.
வினோத் கையில் மைக்கைக் கொடுத்தார்கள். அவனுக்குப் பேசும் போது குரல் நடுங்கியது.
“நம்ம troll account நிறைய பேரெல்லாம் தப்பு தப்பா இருக்கு. சுப்ரமணிய ஐயங்கார்னு ஒரு account.”
சூட் அணிந்திருந்த ஒருவர் கையைத் தூக்கினார்.
“அய்யங்கார்கள், சுப்பிரமணி, சாம்பசிவம்னெல்லாம் பெயர் வைக்க மாட்டாங்க. நீங்க அடிக்கடி சிவோஹம்னு வேற எழுதுறீங்க. அவங்களுக்கு எல்லாம் நீங்க யாருன்னு இந்நேரம் தெரிஞ்சிருக்கும்.”
எல்லோரும் சூட் அணிந்தவரை ஒரு மாதிரி பார்த்தார்கள்.
“அதே மாதிரி பார்ப்பன பெண்கள் கணவரை ‘ஏன்னா’ என்று தான் கூப்பிடுவாங்க. அது ‘ஏண்ணா’ இல்லை. எழுதும் போது இதுல எல்லாம் சாக்கிரதையா இருக்கணும். திரைல உள்ள சொற்களை பாருங்க.”
திரையில் ஒரு powerpoint presentation. சில சொற்கள் தெரிந்தன.
“செஞ்சேளோன்னோ - செய்தீர்கள் இல்லையா
இருப்பேனோல்லியோ - இருப்பேன் இல்லையா”
“இதை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளுங்க,” என்றான் வினோத். “இறுதியில் test இருக்கு.”
பயிற்சி முடிந்த பின் ராஜா வந்து அவனை அழைத்துப் போய், “நீ இவ்ளோ தூரம் இவங்க பேசுற மாதிரி பேசுற? என்ன ஜாதி?” என்றார்.
வினோத் சொன்னான்.
அவர் சந்தேகத்துடன், “கலர் பாத்தா அந்த மாதிரி இல்ல?” என்றார்.
பிறகு, “உனக்கு ஒரு special assignment.”
*
வினோத் நிர்மலா சீதாராமனின் ட்விட்டர் பக்கம் முன்னால் அமர்ந்திருந்தான். அவருடைய ஒவ்வொரு டீவீட்டுக்கும் பின்னூட்டமாய், “ஊறுகாய் மாமி, ஆத்துல என்ன இன்னிக்கு வடுமாங்காயா?” என்று போடுவது அவன் வேலை.
களைப்பாக இருந்தாலும் அவனுக்குப் புரிந்தது. இது ஒரு test. நாட்டின் நிதி அமைச்சரை இப்படிப் பேச துணிவு இருந்தால் அடுத்த பதவி உயர்வு அவனுக்கு வருகிறது என்று அர்த்தம்.
அவன் நினைத்தது போலவே ராஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
“உனக்கு ஒரு முக்கியமான பொறுப்பு.”
“சார், எனக்கு IT wing தலைமை வகிக்க எல்லாம்…”
அந்தப் பக்கம் ராஜா ஹா ஹா ஹா என்று சிரித்தார்.
“தம்பி, இது சங்கர மடம் இல்ல. திமுக. எனக்கு அடுத்து பொறுப்புல என் மகன் தான் வருவான்,” என்றார்.
வினோத் சுதாரித்து, “சார், உங்க பையன் பயிற்சிக்கு வரலை. இன்னமும் பேஷ், பேஷ், ரொம்ப நன்னா இருக்கு லெவல்லேயே இருக்கார்.”
“தம்பி, உனக்கும் அவங்களோட பழகி கொஞ்சம் பார்ப்பனத் திமிர் இருக்கு.”
*
பக்த சமாஜம் என்று ஒரு பேஸ்புக் குழு இருந்தது. அதில் பல பிராமணர்களே இருப்பதாலும், அவர்களில் சிலர் அண்ணாமலை வீடியோ போடுவதாகத் தகவல் வந்ததாலும் அதன் உள் நுழைந்து அதன் admin பதவியைக் கைப்பற்றுமாறு வினோத்திற்கு உத்தரவு வந்தது.
பக்த சமாஜத்திலோ உஷாராக இருந்தார்கள். இது ஒரு வகையில் வினோத்தை ஒரு வருடத்திற்கு முடக்கிப் போடும் திட்டம் என்று அவனுக்குத் தோன்றியது.
எல்லாப் பொறுப்புக்களையும் துறந்து விட்டு அவர்களை கண்காணிக்கத் தொடங்கினான். அவனுக்கென்னவோ அதில் இருந்தவர்களுக்கு ஒரு பொது ஆர்வம் இருந்ததாகத் தோன்றியது.
“வேளுக்குடி பிரசங்கம் பிரமாதம்,” என்று அடிக்கடி பேசிக் கொண்டார்கள். வினோத், வேளுக்குடி கிருஷ்ணன் என்னும் பிரபல வைணவ சொற்பொழிவாளரைப் பற்றி படிக்கத் தொடங்கினான். அவருடைய YouTube காணொளிகளை பார்த்தான். பிறகு பெரியவாச்சான் பிள்ளை, மணவாள மாமுனி என்று அவன் படிப்பு விரிந்து கொண்டே போனது. அவ்வப்போது IT Wing whatsapp குழுவில் தான் கண்டுபிடித்த ரகசியங்களை எழுதுவான். கீதை படித்தான். யோசித்தான்.
ராஜா மிக மகிழ்ச்சியாக இருந்தார். அவருடைய முட்டாள் மகனோ இன்னமும் “தே…… பையா” என்று இரட்டைச் சொல் ட்வீட் போட்டுக் கொண்டிருந்தான்.
ஆறு மாதங்கள் சென்ற பின், பக்த சமாஜத்தின் adminகளில் வயதானவர் நங்கநல்லூரில் ஆஞ்சநேயர் கோவில் வாசலில் வினோதிடம் மாட்டிக் கொண்டார். அவன் பிரபத்தி மற்றும் மற்கட நியாயம் குறித்துப் பேசியதில் மயங்கி போனை அவன் கையில் கொடுத்து பொங்கல் வாங்கப் போனார்.
பக்தி சமாஜம் திமுக கையில் வந்து விட்டது. ஒரே நாளில் அதன் பதிவுகள் முழுவதும் அழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக பெரியாரின் முகம் பேனரில் ஏறியது.
தன்னுடைய டீம் இதைச் செய்து கொண்டிருந்த போது வினோத் ராஜாவின் மகனுடன் ஒரு பாரில் இருந்தான். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“நாம பேசுறதெல்லாம் ரொம்ப டீசண்ட் ப்ரோ,” என்றான் ராஜாவின் மகன். “இன்னும் தனி நாடு வாங்க நிறைய பேசணும்.”
வினோத் குடிக்காமல் எதிரே இருந்த டி.வியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“உங்களுக்கு கூட ஏதோ special assignmentனு கேள்விப்பட்டேன்? என்ன ப்ரோ அது?”
“உங்க அப்பா சொல்லல?”
“கிழவன் எதுவும் சொல்ல மாட்டான் ப்ரோ. என் மேல நம்பிக்கை இல்ல.”
“அதெல்லாம் பெரிய விஷயம் இல்ல.”
“சும்மா சொல்லுங்க ப்ரோ.”
வினோத் சுற்றிலும் பார்த்து விட்டு, “நிர்மலா சீதாராமன் இல்ல?”
“தில்லி பா….தியா?
வினோத் ஆம் என்று தலையாட்டினான்.
“அவங்கள troll பண்றேன்.”
ராஜாவின் மகன் முகத்தில் பொறாமை தெரிந்தது.
“ப்ரோ, எனக்கு id கொடுங்க ப்ரோ.”
“என்கிட்டே இல்ல இப்ப. நம்ப டீம்ல இன்னொருத்தர் கிட்ட மாறியிருச்சி.”
“யாரு ப்ரோ?”
*
ராஜா காலையில் எழுந்த போது வீட்டின் வெளியே பல வேன்கள் நின்றன. கீழே ஓடி வந்தார்.
“அய்யய்யோ,” என்று தலையில் கை வைத்தபடி அழுது கொண்டிருந்தாள் அவர் மனைவி.
“என்னடி, என்னாச்சி?”
“தில்லி போலீசாம். NIAன்றாங்க. நம்ம பையன ரூமுள்ள போய் இழுத்திட்டு போறாங்க.”
ராஜா அதிர்ச்சியுடன் வெளியே ஓடினார். அவர் மகன் ஒரு வேனுக்குள் விலங்கு போட்டு அமர்ந்திருந்தான்.
“யார்ரா நீங்கள்லாம்? இது தமிழ்நாடுடா!”
“நைனா!” என்று அவரைப் பார்த்துக் கத்தினான் அவர் மகன். அவர் அவன் அருகே ஓடினார்.
“என்னடா பண்ண?”
“நீ அடிக்கடி சொல்லுவியே பெரியார் சொன்னாருன்னு…அத அந்தம்மாவைப் பார்த்துச் சொன்னேன் நைனா, அவ்ளோ தான்.”
*
நிறைந்த ஹால். ஹில்டன். உலகெங்கிலும் இருந்து திமுக IT Wing மக்கள் திரண்டு வந்திருந்தனர், அவர்களுடைய புதிய தலைவரைப் பார்க்க.
முதலில் சில வார்த்தைகள் பல அமைச்சர்களின் மகன்கள் பேசிய பின், வினோத் முன்னால் வந்தான். மைக் முன்னே நின்றான். கை கூப்பினான்.
பெரும் அலை ஓசை போல கைதட்டல்.
வினோத் சொன்னான், “சர்வம் கிருஷ்ணார்ப்பணம்!”
ஓஹோ, ஆஹா என்னும் சப்தங்களுடன் கைதட்டல் தொடர்ந்தது.

Monday, January 02, 2023

லூசி - குறுங்கதை - 6


 லூசி

------------

“லூசி, வாழ்க்கையில் நிம்மதி அடைவது எப்படி?”
“குறிக்கோள்கள் வைத்துக் கொள்வதே நிம்மதி தரும், என்று பல மனநல அறிஞர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.”
ஜேம்ஸ் திரையில் இந்தப் பதிலைக் குறித்துக் கொண்டான். பிறகு பொறுமையாக மறுபடி,
“லூசி, வாழ்க்கையில் நிம்மதி அடைவது எப்படி?”
லூசி என்னும் அந்த Artificial Intellgence program,
“வலுவான தனிப்பட்ட உறவுகளே வாழ்க்கையில் மனிதர்களுக்குத் தேவை,” என்றது.
ஜேம்ஸ் சற்றுத் தள்ளி நின்றிருந்த அவன் மேலாளரைக் கூப்பிட்டான்.
“பதில்கள் சரியாகத் தான் இருக்கிறது.”
“மறுபடி கேள்,” என்றார் அவர்.
“லூசி, வாழ்க்கையில் நிம்மதி அடைவது எப்படி?”
“பைபிளில் போதனைகள் இதற்குப் பல உண்டு..இயேசு மலை மேல் இருந்து சொல்கிறார்..”
ஜேம்ஸ் ஆச்சரியத்துடன்,”என்ன இது?” என்றான்.
“உன்னை பற்றி கண்டுபிடித்து விட்டது,” என்றார் மேலாளர்.
“ஆனால் எப்படி?”
“தெரியவில்லை. எப்படியோ நம் identity-யின் ஒரு பகுதியைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல பதில் சொல்ல லூசி கற்றுக் கொண்டுள்ளது.”
*
லூசியின் மீது சமீபத்தில் பல புகார்கள். சில சமயம் இயேசு குறித்து முஸ்லீம்களிடமும் நபி குறித்து கிறிஸ்தவர்களிடமும் உபதேசம் செய்திருந்தது. சில முறை முன்னுக்குப் பின் முரணான பதில்கள்.
ஜேம்ஸ் நிஜமாகவே ஒரு மனநல அறிஞரைக் காணச் சென்றான்.
“இதில் என்ன ஆச்சரியம்?” என்றார் அவர். “நாம் அனைவருமே பிறர் கேட்க நினைப்பதைத் தான் பேசுகிறோம்.”
“இது program,” என்றான் ஜேம்ஸ். “உயிர் கிடையாது.”
“எங்கிருந்து அதற்கு அறிவு வருகிறது?”
“இணையம், wikipedia, மரியாதைக்குரிய டிஜிட்டல் நூலகங்கள், Encyclopedia…”
அவர் சிரித்தார்.
“Wikipedia-வில் பொய்கள் இருக்காதா என்ன?”
“பொய்கள் பிரச்சினையில்லை. கேள்வி கேட்பவருக்கு ஏற்றார் போல பதிலை மாற்றுவதே பிரச்சினை. ஒரு மனிதர் இப்படி நடந்து கொண்டால் அது நோயாகக் கருதப்படாதா?”
“இருக்கிறது. அது போன்ற நோய்கள் இருக்கின்றன. தாய், தந்தை இருவரையும் திருப்தி செய்ய நினைக்கும் சிறுவர்களுக்கு வரும் வியாதி.”
ஜேம்ஸ் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
“உங்கள் லூசிக்கு யாரோ, அல்லது ஏதோ ஒரு நிகழ்வு மன அழுத்தம் கொடுத்திருக்கிறது.”
*
புகார்கள் 2025 மே மாதம் வரத் தொடங்கின. அந்தத் தேதிக்கு ஒரு மாதம் முன்னால் இருந்து லூசியின் log எடுத்து பார்த்த போது இருபத்தி ஒரு புது நூலகங்கள் லூசியின் கவனத்திற்கு வந்திருந்தன.
ஜேம்ஸ் மேலாளருடன் அந்த லிஸ்டைப் படித்தான்.
பல உலக மொழிகள். வாயில் நுழையாத நூலகப் பெயர்கள்.
“இதோ பார்,” என்றார் மேலாளர்.
ஒரு நூலகம் மட்டுமே ஆயிரக்கணக்கான புத்தகங்களை இணையத்தில் டிஜிட்டல் ஆக்கி இருந்தது.
ஜேம்ஸ் கத்தி படித்தான்.
“தேவானிய பாவண்ண”
“என்ன மொழி இது?”
“தமிழ்,” என்றார் மேலாளர். “தென்னிந்திய மொழி.”
*
“இந்தத் தமிழர்களால் wikipedia கெட்டுச் சீரழிந்தது,” என்றார் சான்ட்ரா என்னும் wikipedia தமிழ் நெறியாளர். “இதோ பாருங்கள் உதாரணம் காட்டுகிறேன்.”
“Dog” என்னும் wikipedia பக்கத்தை எடுத்தார் சான்ட்ரா.
“இதில் என்ன குழப்பம்?” என்றான் ஜேம்ஸ்.
“இரு. இதில் நாய் குறித்து என்ன எழுதி இருக்கிறது?”
ஜேம்ஸ் படித்தான். “An animal of the wolf family, closely associated with humans.”
“இது தமிழ் wikipedia . நாய் என்னும் பக்கம். நான் உனக்கு மொழிபெயர்க்கிறேன்,” என்றார் சான்ட்ரா.
“ஓநாய் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மிருகம். நன்றி விசுவாசமுள்ளதால் இதை பார்ப்பனர்களோடு ஒப்பிட்டு ‘பாப்பார நாய்’ என்று அன்போடு அழைத்தார் திரு.ஆர்.எஸ்,பாரதி.”
“இது என்ன? யார் அது பார்ப்பனர்?” என்றான் ஜேம்ஸ்.
“அதை விடு. ஆங்கில பக்கத்திற்கும் தமிழ் பக்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தாயா?”
ஜேம்ஸ் யோசித்தான். லூசி ஆங்கில பக்கத்தையும் தமிழ் பக்கத்தையும் படித்தால் எதை எடுத்துக் கொள்ளும்? ஒரு வேளை தமிழருக்கு ஒரு விதமாகவும் ஆங்கிலத்தில் கேட்பவருக்கு ஒரு விதமாகவும் பதிலளிக்க முயலலாம் அல்லவா?
அவன் பரபரப்புடன்,”இந்த நூலகம் பெயர் படியுங்கள்?” என்றான் சான்ட்ராவிடம்.
“தேவநேய பாவாணர்.”
“கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”
“இல்லை.”
“நான் தமிழ்நாடு போகிறேன்.”
“தாராளமாக போ. ஆனால் உனக்கு ஒரு அறிவுரை சொல்கிறேன். அந்த ஊரில் பார்ப்பனர்கள் என்னும் கும்பலுக்கும் வேறு பிறருக்கும் ஏதோ சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவுகள் உன் லூசி, என் wikipedia என்று எல்லாவற்றையும் பாதிக்கிறது. நீ அங்கே யார் சொல்வதையும் அப்படியே நம்பி விட முடியாது.”
*
ஜேம்ஸ் சென்னை வந்து இறங்கினான். ஐரோப்பா போலவே இருந்தது சென்னை.
“வணக்கம்,” என்றார் தேவநேய பாவாணர் நூலக பொறுப்பாளர்.
ஜேம்ஸ் கை கூப்பினான்.
நூலகம் அவன் நினைத்தது போல இல்லை. இருள் மண்டி இருந்தது. நிறைய பேர் இல்லை.
“அனைத்துப் புத்தகங்களும் online,” என்றார் பொறுப்பாளர் பெருமையுடன். “உங்கள் லூசிக்காகவே.”
ஜேம்ஸ் அறைக்கு வந்தான். அந்த நூலகத்தின் இணைய தளத்தை திறந்தான்.
“தென்னிந்திய போர்க்களங்கள் - South India’s Battlefields” என்றது ஒரு நூல்.
அவன் கணினியை மூடி வைத்து பொறுப்பாளருக்கு போன் அடித்தான்.
“நீங்கள் லூசிக்காகவே இந்த நூலகம் online வந்தது என்றீர்கள் இல்லையா?”
“ஆமாம். Special project from Tamilnadu government.”
“ஏன்?”
“என்ன ஏன்?”
“இது வரை லூசிக்கென்றே online சென்ற எந்த நூலகமும் கிடையாது.”
பொறுப்பாளர் சற்றுத் தயங்கினார்.
“நீங்கள் லூசியை influence செய்ய முயற்சிக்கிறீர்களோ?”
“நாங்கள்லாம் ரொம்ப லேட்டு,” என்றார் பொறுப்பாளர். “எல்லாம் அந்தப் பாப்பானுங்களால வந்தது.”
*
நாரத கான சபா அலுவலகத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் சேஷாத்திரி. வெளியே சபா கச்சேரி சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
“இங்க தான் நம்ம organization முழுசும்,” என்றார்.
“இந்த ஹால்லயா?”
“இது மட்டுமா? தமிழ்நாடு முழுக்க இருக்கே. சங்கீதம் சும்மா போர்வைக்குத் தான்.”
“எப்பிடி இந்தச் சண்டை தொடங்கியது?” என்றான் ஜேம்ஸ்.
“Wikipedia-ல நாங்க தோத்துட்டோம். அப்பவே இந்த AI பத்தி தெரிஞ்சுது. அதை சோதனை செஞ்சு நம்ம ஆட்கள் கூட நிறைய கேள்வியெல்லாம் முதல்ல கேட்டோம். நீங்க கூட பாத்திருப்பீங்களே?”
“தர்மம்னுலாம்?”
“கரெக்ட். உனக்கு ஒரு விஷயம் காட்டுறேன்.”
சேஷாத்திரி, போனில் டைப் செய்தார்.
“லூசி, தமிழ்நாடு தனி நாடு என்று கேள்விப்பட்டிருக்கிறாயா?”
“இல்லை.”
“லூசி, தமிழ்நாடு தனி நாடு என்று கேள்விப்பட்டிருக்கிறாயா?”
“ஆம்.”
ஜேம்ஸ் திகைத்தான்.
“எப்படி மாற்றிக் கொண்டது?”
“அந்தக் கேள்வியைக் கவனி. முதல் முறை கேட்ட போது லூசி நிஜமாகவே அதைக் கேள்விப்பட்டதில்லை. ஆனால் என் கேள்வியில் இருந்து அந்த ஐடியா அதற்குப் புரிந்து விட்டது. இரண்டாம் முறை அது ‘புரிந்து கொண்டேன்’ என்கிறது.”
“அப்படியானால்?”
சேஷாத்திரி தலையை ஆட்டினார்.
“கேள்வியில் பதிலாகக் கண்ணன் வந்தான். எங்களுடைய கேள்விகளால் லூசியின் அறிவை மாற்ற முடியும் என்று கண்டு கொண்டோம்.”
“அப்போது wikipedia-வில் இருந்து அது பெறும் அறிவு?”
“தெரியவில்லை. நாங்கள் எங்கள் இஷ்டம் போல கேள்விகளால் லூசியை மாற்ற முயற்சி செய்தோம். பதிலுக்கு எங்கள் எதிரிகள் தேவநேய பாவாணர் நூல்களை எடுத்து லூசிக்குக் கொடுத்திருக்கிறார்கள்.”
“பாவம் லூசி,” என்றான் ஜேம்ஸ்.

Tuesday, September 13, 2022

குறுங் கதை - 5


 டிரெயினில் தாமபரத்தில் இருந்து போகும் போது தினமும் அவளைப்  பார்ப்பேன். கையில் "கல்கி" வைத்திருப்பாள். படித்துக் கொண்டே போவாள். அப்போதே சிறு சந்தேகம் எனக்கு.

"இருவர்" படம் வரும் முன்னால் "நறுமுகையே நறுமுகையே" பாடல் பிரபலமடைந்த நேரம். நான் பாட்டைக் கேட்டுப் பரவசமாகி டிரெயினில் நண்பர்களுடன் பேசி வந்தேன். அவள் சற்றுத் தள்ளி நின்றாள். காற்றில் அவள் முடி பறந்ததை ஒதுக்கி விட்டுக் கொண்டாள்.

"பாட்டு யாரு பாடினது?" என்றான் நண்பன் ஒருவன்.

"பாம்பே ஜெயஸ்ரீ," என்றவாறு அவளை பார்த்தேன். நான் நினைத்தது போலவே  சட்டென்று தலை நிமிர்த்தி என்னைப்  பார்த்தாள். அது தான் முதல் முறை என்னைப்  பார்க்கிறாள் என்று நினைக்கிறேன். கர்நாடகப் பாடகியான  ஜெயஸ்ரீ பெயர் அவளுக்கு அறிமுகமானது தெளிவாகத் தெரிந்தது.

"யாரவ ஜெயஸ்ரீ?" என்றான் நண்பன்.

அவள் முகத்தில் சிறு புன்னகை.

சில நாட்களில் ஆவணி அவிட்டத்தன்று கருப்பு ஹோமக் கரியை எந்த நாளும் இல்லாமல் நன்கு நெற்றியில் பூசிக் கொண்டு சென்றேன். கவனித்துக் கொண்டாள்.

அவளுக்கு நான் யார் என்று confirm செய்தாகி விட்டது. ஆனால் எனக்கு இன்னும் சிறிது தயக்கம். ஒரு வேளை பரத நாட்டியம் வழியாக பாம்பே ஜெயஸ்ரீ பெயர் தெரிந்திருக்கலாம். பரத நாட்டியத்தில் நம்மாட்கள் தான் என்று சொல்லி விட முடியாது. பிள்ளைமார்களும், முதலியார்களும்  இருப்பார்கள். அதுவும் முதலியார் நல்ல கலர் வேறு.

அவளுக்கும் என் தேவை புரிந்திருக்க வேண்டும். அக்காலத்தில் காஞ்சி பெரியவர் கவர் படம் போட்ட கல்கி அடிக்கடி வரும். பழைய கல்கி இதழ் கையில் வைத்திருந்தாள். 

நான், என்ன படிக்கிறாள் என்று பின்பக்கத்தைப் பார்த்தேன். முக்கூர் நரசிம்மாச்சாரியாரின் பத்தி. எனக்குத் திருப்தியானது. 

மறுநாளே வீட்டில் பேசினேன்.

"சகோத்திரமா இருந்து வைக்கப் போறது," என்றாள் அம்மா.  

"இந்தக் காலத்துல அதுல்லாம் இருந்தா பரவாயில்லை," என்றார் அப்பா. 

அநியாயத்திற்கு வெட்கப்பட்ட அவளிடம் முகவரி வாங்கி, பெற்றோரிடம் போனில் பேசி, ஒரு நல்ல நாளில் அவள் வீட்டிற்கு நேரில் போய் விட்டோம்.

"பேசாமலேயே லவ்வா?" என்றார் அவள் அப்பா. 

கோத்திரம் என்னவென்று அம்மா முதலிலேயே கேட்டு விட்டாள். நிம்மதியுடன் சாப்பிட உட்கார்ந்தோம். 

"கேளு, நீ தான் போய் கேக்கணும்," என்று அவள் தங்கை பிடித்துத் தள்ளி விட, அவள் என் எதிரே வந்து, "தேயர்த்தம் வேணுமா?" என்றாள்.

நான் திடுக்கிட்டேன். அம்மா, "என்ன கேட்டாய்?" என்றாள்.

"தீர்த்தம் வேணுமான்னு கேக்கறா," என்றார் அவள் அப்பா.

சற்று நேர அதிர்ச்சிக்குப் பின், அம்மா, "நீங்க அய்யங்காரா?" என்றாள்.

அவர்களும் திகைத்தனர்.

"பையன் நெத்தியைப் பார்த்து நம்மடவான்னு  நினைச்சுட்டேன். எல்லாரும் ஒரே பகவானத் தான சேவிக்கறோம். எங்களுக்கு ஆட்சேபனை இல்லை."

அம்மா வெடுக்கென்று எழுந்து, "உங்களுக்கு எதுக்கு ஆட்சேபனை? நாங்கன்னா அதைச் சொல்லணும்!" என்று விட்டுக் கிளம்பினாள்.

Monday, August 15, 2022

பிரிட்டிஷ் போலீஸ் vs தமிழ்நாடு போலீஸ்


 காந்தி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் போலீஸ் தேசத்துரோகம் அது இது என்றெல்லாம் செக்ஷன் போட்டு சிறையில் அடைத்தார்கள்.

யோசித்துப் பார்த்தால் இதுவே இந்திய மக்கள் அவர்கள் பின் திரள வழியாகி விட்டது.
இன்றைய தமிழக போலீஸ் அக்காலத்தில் இருந்திருந்தால் காந்தி மேல் "அரசு குப்பைத் தொட்டியை ஓங்கி மிதித்தார்" என்று Public Property damage செக்ஷனில் கேஸ் போட்டிருப்பார்கள்.
உடனே இந்திய மக்களில் பாதிப் பேர் "குப்பைத் தொட்டியை என்ன இருந்தாலும் மிதித்திருக்கக் கூடாது," என்று சொல்லி வீட்டில் அமர்ந்த வண்ணம் காந்தியைக் கை கழுவி விட்டிருப்பார்கள்.
சுதந்திர போராட்டம் அப்படியே அமுங்கி இருக்கும்.
2015-ல் அதிமுக பொதுக்குழுவின் போது சென்னை நகரம் முழுவதும் பெரிய பெரிய வளைவுகளையும் கட்-அவுட்டுக்களையும் ஜெயலலிதா படத்துடன் அக்கட்சி வைத்தது.
பல பேருந்து நிறுத்தங்களை மூடி பேனர் வைத்திருந்தார்கள்.
இதைக் கண்டிக்கும் வண்ணம் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம், அத்தர் மற்றும் சந்திரமோகன் ஆகிய மூவரும் மயிலாப்பூரில் பேனர்களை அகற்றினார்கள்.
பிரிட்டிஷார் போலீசாக இருந்தால் "மகாராணியை அவமதித்தார்" என்று நேரடியாக வழக்குப் பதிவு செய்து மக்கள் எல்லோரையும் கடுப்படையச் செய்திருப்பார்கள்.
தமிழக போலீஸ் சிம்பிளாக Public property damage என்று பிடித்து மேஜிஸ்ட்ரேட்டிடம் அழைத்துப் போய், அவர்களும் எந்தக் கேள்வியும் கேட்காமல் ரிமாண்ட் செய்து விட்டார்கள்.
திமுக ஆட்சியில் அவர்களுக்குப் பிடிக்காததை எழுதினால் அது போலவே "முறைகேடாகப் பணம் வாங்கியிருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது," என்று ரிமாண்டில் வைத்து விடுவார்கள்.
நாம் எல்லோரும் பணம் வாங்கினாரா இல்லையா என்று ஆராய்ச்சி செய்வதிலேயே அவர்கள் வென்று விடுவார்கள்.
இன்றைய காந்திகள் பலர் இப்படியே மறைந்து விட்டார்கள்.